வழக்கு எண் 18/9
மிக அருமையான படம். கதைப்பின்னலும், அதன் காட்சியவதாரமும் சிறப்பான
வகையில் அமைத்திருப்பதால், தன் அழகியிலுக்குள் ரசிக்கத்தெரியாத மட்டியையும் உள்ளுக்குள்
இழுத்துப்போட்டுக்கொண்டுவிடுகிறது, வழக்கு எண் 18/9. இது பலாஜி சக்திவேல் அவர்களிடம்
இருக்கும் கலையின் தெளிவு. இவர் பார்வையாளரைத் தன்வசப்படுத்திடும் யுத்தி இசமாகக்கூடும்.
ஆனால் கருத்தியல் ரீதியாக பார்க்கும் போது... இந்தப் படத்திலும் (காதல் படத்தில் சந்தியாவிலும்)
பள்ளிச்சீருடையோடு காதலன் காதலி நகரின் பட்டிதொட்டிகளிலெல்லாம் போஸ்டர்களாக பேனர்களாக
பளிச்சிட்டு திரையரங்குக்கு யாரை அழைக்கிறார்கள். அழைத்ததுதான் அழைத்தார்கள். வந்தவர்களுக்கு
திரைப்படம் என்ன செய்தி கொடுக்கிறது. செய்தியை விளக்கும் படத்தின் காட்சியால் பார்வையாளர்களுக்கு
எற்பட்ட உணர்வுகள் என்ன...?
சமூகத்தில் அவரது படங்கள் மூலமாக என்ன செய்ய முனைந்திருக்கிறார்
என்பது யோசனைக்குறியது?
இந்தப் படத்தில் இரண்டு பகுதிகள் தான் இருப்பதாக உணர்கிறேன். ஒன்று
பள்ளிச்சிறார்கள் இன்னொன்று வீதிக்குழந்தைகள்.
பள்ளிக்குப்போகிறவர்கள் மமதையினால் கேவலமான செய்கைகளில் ஈடுபடுகின்றனர்.
வீதிவாசிகள் ஏழ்மையினால் அன்பானவர்களாக இருக்கிறார்கள்.
கதையில் அன்பையும் பரிவையும் தயையும் சிறப்பாகக் காட்சியமைக்க ஏழைகள்
உதவுகிறார்கள். சொல்லவே முடியாமல் அவர்களைக் காட்சியிலிருந்து வெளியேறப்படுபவர்கள்
குற்றமிழைத்த இரண்டு பள்ளிச் சிறுவர்கள்.
“காதல்“ படத்தில் புத்தகப்பையை எறிந்துவிட்டு காதலனோடு விளையாடும்
மாணவி இங்கே வேறொரு அவதாரத்தில் ஸ்டார் ஹோட்டலில் பார்வையாளர்களை ஏமாற்றும் செல்போன்
வீடியோவில் தெரியும் குழந்தையின் பின்புறத்தைப் பார்த்துச் சிரிக்கிறாள், பீச் போகிறாள்,
குளிக்கிறாள், ரூம் போடுகிறாள். தப்பிக்கிறாள். காதலில் பாலத்திற்கடியில் ஒளிந்துகொண்டு
விளையாடுகிறார்கள்.
பள்ளிக்கூடம் போகாதே காதல் செய்...! பள்ளிச்சிறார்கள் மோசமானவர்கள்....
ஆசிரியர்கள் கேவலமானவர்கள். தலைமை ஆசிரியர்கள் அதைவிட கேவலமானவர்கள். வெளியே வாருங்கள்...
காதல் செய்வோம்...
படிக்க வாய்ப்பில்லாத சிறார்கள் உத்தமமானவர்கள். அவர்களிடம் அன்பு
இருக்கிறது. அவர்களைத்தான் உலகம் மதிக்கிறது. அவர்களின் ஏழ்மையில் கடவுள் கூட இருக்கிறார்
என்ற உச்சபட்ச புலகாங்கிதத்தால் பையை எறிந்துவிட்டு வீட்டை உதறிவிட்டு பறந்து இந்த
உலகில் எங்கோ எதிலோ தொலைந்துபோவதற்கு வழிகாட்டுவதாக.
பல அற்புதமான காட்சிகள் இந்தப் படத்தில் இருந்தபோதும், பலரும் நாகரீகமாகப் பகிர்ந்து பாராட்டுதலை
வெளிப்படுத்தியிருக்க....., இன்னும் மேம்பட்டப்படமாக வருவதற்குரிய வாய்ப்புகள் நிறைய
இருப்பதைச் சொல்லவே இந்த குறை சுட்டும் பகுதி. ஏனெனில் பள்ளிக்கூடத்தை சமூக அக்கறையுடையவர்கள்
புனிதமாகக் கருதவேண்டும் என்ற நோக்கிற்காகத்தான். உலகில் கல்வித்தளத்தைத் தவிர புனிதமான
பகுதி வேறெதுவும் இல்லை. அதில் குறைகள் இருக்கலாம். ஆனால் அதை ரகசியமாகச் சரிசெய்யவேண்டுமே
அன்றி இப்போது பல தமிழ்ச்சாணல்களில் பள்ளிக்கூடத்தை விலங்குமாட்டி தெருத்தெருவாக இழுத்துச்
சென்று அவமானப்படுத்தி மெஜாரிட்டியின் கவனத்தைத் தன்பக்கம் இழுத்துச் செல்வதுபோல் செய்வதை
சமூக அக்கறைகொண்டோர் யோசிக்க...!
உண்மையில் வழக்கு எண்18/9 தமிழ்சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்திற்குப்
போய்விட்டப்படம். பாலாஜி சக்திவேல் அவர்கள் இன்னும் மேன்மேலும் சிறப்புகளைப் பெற வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment